More servicesWindows Live
HomeHotmailSpacesOneCare
 
MSN
Sign in
 
 
Spaces home  திருதிருPhotosProfileFriendsBlog Tools Explore the Spaces community

Blog

    • View next 20 entriesView last 20 entries
    April 25

    திருப்புல்லாணி பெருமாள் திருமஞ்சனம்

     திருப்புல்லாணி ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமத்தில் நடந்த பெருமாள் திருமஞ்சனத்தின் இரண்டாவது பகுதி இது. ஏற்கனவே முதல் பகுதி  இந்த வலையில் உள்ளது. அதன் தொடர்ச்சியாக இது வருகிறது.


    Thiruppullani thirumanjanam Pt2

      
    Video: Thiruppullani thirumanjanam Pt2

    April 24

    திருப்புல்லாணி பங்குனி உத்ஸவம் பகுதி 2

     

    அகுதி 1ன் தொடர்ச்சி இது. பெருமாள் கோவிலிலிருந்து மண்டகப்படிக்கு எழுந்தருளும் காட்சி.

    Perumal from kovil to Ashramam

      
    Video: Perumal from kovil to Ashramam
    April 23

    திருப்புல்லாணி திருமஞ்சனம்

      திருப்புல்லாணி பங்குனி உத்சவம் 4ம் திருநாள் ஆண்டவன் ஆச்ரமத்தில் பெருமாளுக்கு நடந்த விசேஷ அலங்கார திருமஞ்சனத்தின் முதல் பகுதி இது.

    Thiruppullani uthsavam Pt3

      
    Video: Thiruppullani uthsavam Pt3
    April 21

    Talking about Thiruppullani uthsavam Pt1

     பங்குனியில் திருப்புல்லாணியில் ஸ்ரீஆதிஜகன்னாதப் பெருமாளுக்கு 11 நாள் ப்ரும்மோத்ஸவம். அதில் 4ம் நாள் ரெட்டை கருட சேவை உத்ஸவம். தற்போது ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரம மண்டகப்படியாக நடந்து வருகிறது. இத்தனை வருடங்களாக கோவிலிலேயே நடந்து வந்த மண்டகப்படி இப்போது ஆண்டவன் ஆச்ரமம் புதிதாகக் கட்டப்பட்டதை அடுத்து புதிய கட்டிடத்தில் பெருமாள் காலையில் எழுந்தருளி விசேஷ திருமஞ்சனம் கண்டருளி இரவில் கருட வாகனப் புறப்பாடு நடைபெற்றது. அதில் முதல் பகுதி வீடியோ இது. பகுதி பகுதியாக தொடரும்.


    Thiruppullani uthsavam Pt1

      
    Video: Thiruppullani uthsavam Pt1

    February 17

    திருவரங்கத்தந்தாதி

     

    thiruvarangatitle

    தாரணிதானவன்பாலிரந்தான்சங்கம்வாய்வைத்தொன்னார்
    தாரணிதானவஞ்செய்தானரங்கன்றமர்கள்பொருந்
    தாரணிதானவமராவதியுந்தருநிழலும்
    தாரணிதானவயிராவதமுந்தருகினுமே
    .

    (இ -ள்) தானவன்பால் -- அசுரனான மகாபலியினிடத்து,  தாரணி இரந்தான் -- (மூன்று அடி) நிலத்தை யாசித்தவனும்,, சங்கம் வாய் வைத்து -- (தான் தனது) திவ்விய சங்கத்தை வாய்வைத்து ஊதிய மாத்திரத்திலே, ஒன்னார் தார் அணி தவம் செய்தான் -- பகைவர்களுடைய, படைவகுப்பினொழுங்கைப் பழுதுபடுத்தியவனும் ஆன, அரங்கன் - ரங்கநாதனுடைய, தமர்கள் -- அடியார்கள், --- அணிது ஆன அமரா வதியும் -- அழகியதாகிய சுவர்க்கலோகத்தையும், தருநிழலும் - (அங்குள்ள) கற்பக விருக்ஷங்களின் நிழலையும் , தார் அணி தானம் அயிராவதமும் -- கிண்கிணிமாலையை அணிந்ததும், மதங்கொண்டது மான ஐராவதமென்னுந் தெய்வயானையையும், தருகிலும் - (வலியக்) கொடுத்தாலும், பொருந்தார் -- -- (மனமிசைந்து அவற்றைப் பெற) உடன்படார்; (எ-று)

        திருமாலடியார்கள் மீளாவுலகமாய்ப் பேரின்பத்திற்கு உரிய இடமான பரமபதத்திற்குச் செல்ல இணங்கு வரேயன்றிச் சிலகாலம் சிற்றின்பங்களை யனுபவித்தற்கே உரிய சுவர்க்கலோகத்து இந்திர பதவியைக் கொடுத்தால் அதனையும் சிறிதும் பொருள் செய்யார் என்பதாம் ; “ ஆனாத செல்வத்தரம்பையர்கடற்சூழ வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன் “ என்று குலசேகராழ்வார் அருளிச் செய்தமை காண்க ; பிரமன் கட்டளையால் இந்திரன் சரபங்க மகரிஷியைச் சத்தியலோகத்துக்கு அழைத்தபோது, மகா விஷ்ணுபக்தரான அம்முனிவர் அம்மேலுலகையுமுட்பட இகழ்ந்து “அற்பங்கருதேன்“என்றும்,“மறுகா நெறி யெய்துவேன்” என்றும் உரைத்ததும் உணரத்தக்கது.

         தாநவன் -- ( காசியபமுனிவரது மனைவிகளுள்) தநுவென்பவளது மரபினரென்று பொருள்படும் வட மொழித் தத்திதாந்தநாமம். ஒன்னார் -- ஒன்றார் என்பதன் மருஉ. அவம்செய்தான் -- பயனிலதாக்கிய வன். தம் --தம்மவர்;  கிளைப்பெயர்; அணிது -- அண்ணிது ; அதாவது சமீபத்திலுள்ளது என்றும் உரைக்கலாம். எல்லாவுலகங்களிலும் மேலுள்ளதான  முத்தியுலகத்தின் சேய்மையை நோக்குமிடத்து, இந்திரனது நகரமான அமராவதி மிக அருக்லுள்ளதாதல் காண்க, சேணுலகமாகிய முத்தியைப் பெறவல்ல பாகவதர்க்குச் சுவர்க்கலோகம் அரியதொன்றன் றாதலால், எளிது என்னும் பொருளில் ‘ அணிது' என்ற தாகவும் கொள்ளலாம். சங்கம், அமராவதி, தரு, தாகம், ஐராவதம் -- வடசொற்கள். அமராவதீ என்ற பெயர் தேவர்களையுடையதென்று காரணப்பொருள்படும்.    சுவர்க்கலோகத்தில் பஞ்சதேவ  தருக்களின்   நிழல் இந்திரன் அரசுவீற்றிருக்குமிடமாதலை,  ”இன்றளிர்க் கற்பகநறுந்தேனிடைதுளிக்கு நிழலிருக்கை” என்றதனாலும் அறிக. அயிராவதம் -- முதற்போலி. இது, இந்திரனது வெள்ளையானை; நான்கு தந்தங்களையுடையது. தருகின், கு - சாரியை. உம்மை -- உயர்வுசிறப்பு.

       கண்ணன் சத்தியபாமைக்காகப் பாரிசாதத்தருவைத் தேவலோகத்தினின்று பெயர்த்துப் பூலோகத்துக்குக் கொணர்கையில் வந்து எதிர்த்துப் போர்செய்த சகலதேவ சைநியங்களையும் தனது சங்கநாதத்தினாலே பங்கப்படுத்தினமையும், மகாபாரதயுத்தத்தில் கண்ணன் அர்ச்சுனனுக்குச் சாரதியாய் நிற்கையில் தனது சங்கினொலியாற் பகைவர்களை அஞ்சுவித்து அழித்தமையும் மற்றும் பலபோர்களில் இங்ஙனஞ் செய்தமையும்பற்றி, ‘சங்கம்வாய்வைத் தொனார்தாரணி தானவஞ்செய்தான்' என்றார். “அருட் கொண்டலன்னவரங்கர் சங்கோசை யிலண்ட மெல்லாம், வெருட்கொண்டிடர்பட மோகித்து வீழ்ந்தன வேகமுடன், தருக்கொண்டு போகப்பொறாதே தொடருஞ் சதமகனும், செருக்கொண்ட முப்பத்துமுக்கோடி தேவருஞ் சேனையுமே' “தருணவாள் நிருபர் மயங்கிவீழ்தர வெண்சங்கமுமுழக்கி” என்பன காண்க.

    February 04

    திருவரங்கத்தந்தாதி

                                     thiruvarangatitle

    செய்யவளைக்குருவின்னருளாற்றிருத்தாள்வணங்கிச்
    செய்யவளைக்குலஞ்சூழாங்கேசன்சிறிதமுது
    செய்யவளைக்கும்புவிக்குமங்காந்தசெவ்வாய்முகுந்தன்
    செய்யவளைக்குஞ்சிலம்பணிபாதங்கள்சேர்ந்தனமே. 2
    .

    (இ—ள்) குரு இன் அருளால் – ஆசாரியருடைய இனிமையான கிருபாகடாக்ஷத்தினால், செய்யவளை திரு தாள் வணங்கி – திருமகளைத் திருவடிதொழுது, செய்யவளை குலம் சூழ் அரங்க ஈசன் --- கழனிகளிலுள்ள சங்கினங்கள் சூழப்பெற்ற திருவரங்கத்து நாதனும், அளைக்கும் புவிக்கும் அமுது செய்ய சிறிது அங்காந்த செவ் வாய் முகுந்தன் --- வெண்ணெயையும் பூமியையும் உண்ணுதற்குச் சிறிது திறந்த சிவந்த வாயையுடைய முகுந்தனென்னும் ஒரு திருநாமமுள்ளவனுமான திருமாலினது, செய்ய வளைக்கும் சிலம்பு அணி பாதங்கள் – செவ்வியையுடைய வளைந்துள்ள சிலம்பென்னும் ஆபரணத்தை யணிந்த திருவடிகளை, சேர்ந்தனம் – அடைந்தோம் ; (எ – று)

    ஸதாசாரியனையடுத்து அவனபிமானத்தை அவனருளாற்பெற்று அது மூலமாகவுண்டான பிராட்டி புருஷகாரபலத்தாலே பெருமாள் திருவடியிலே சரண்புகுந்தோமென்றார். ஆக, இதனால், ஆசார்யபிமானமே உத்தாரகமென்னும் அர்த்தம் சொல்லியதாயிற்று. ஈற்று ஏகாரம் – தேற்றவகையால், இனி எமக்கு ஒருகுறையு மில்லை யென்ற பொருளைத் தொனிப்பிக்கும். சேர்ந்தனம் என்ற தன்மைப்பன்மை – தனதுகுலத்து முன்னோரையும் பின்னோரையும் தனது அடியார்களையும் உளப்படுத்தும். வணங்கிச்சேர்ந்தனம் என இயையும்.

    செய்யவள் – செந்நிறமுடையவள்; செம்மையெனும் பண்பினடியாப் பிறந்த பெயர். குரு என்ற வடசொல் – அஜ்ஞானமாகிய அகவிருளை யழிப்பவனென்று அவயவப்பொருள்படும். (கு – இருள், ரு – ஒழிப்பவன்) இன் அருள் – பண்புத்தொகை; இன் –சாரியையெனக் கொண்டு குருவினது அருளென்றால், னகரமெய்-விரித் தல் விகாரமாம். செய்யவளைத் தாளை வணங்கி என இரண்டு செயப்படுபொருள்வந்த வினையாகவாவது, செய்யவளினது தாளை வணங்கி என உருபுமயக்க மென்றாவது, செய்யவளைத்தாளிலே வணங்கி என்றாவது கொள்க. செய்ய என்ற சொல், இரண்டாமடியில் செய் என்னும் வினைப்பகுதியின்மேற் பிறந்த குறிப்புப் பெயரெச்சமும்; மூன்றாமடியில், செய் என்னும் வினைப்பகுதியின்மேற் பிறந்த தெரிநிலை வினையெச்சமும்; நான்காமடியில், செவ்வியையுணர்த்தும் செம்மையென்னும் பண்பின்மேற்பிறந்த குறிப்புப் பெயரெச்சமுமாம். வயலை “செய்” என்பது பன்றிநாட்டுத் திசைச்சொல், வளை – வளைந்துள்ளது ; உட்சுழிந் துள்ளது. ‘செய்யவளைக்குலஞ் சூழரங்கம் ‘ என்பது, நீர்வளமிகுதியை உணர்த்தும். அரங்கேசன் – குணசக்தி பெற்ற வடமொழித் தொடர். தெரியோர் உண்ணுதல், அமுதுசெய்த லெனப்படும். உபசாரச் சொல். வெண்ணெயுண்ண வாய் திறந்தது, கிருஷ்ணாவதாரத்திலே திருவாய்ப்பாடியில் வளர்ந்த குழந்தைப் பருவத் திலென்க. புவி என்ற சிறப்புப்பெயர் பொதுப்பொருளின் மேலதாய் உலகமென்றவாறாம். அதனையுண்ண வாய்திறந்தது , பிரளயகாலத்திலென்க. பிரமன் முதலான சகலதேவர்களுமுட்பட யாவும் அழிந்துபோகிற யுகாந்தகாலத்தில் ஸ்ரீமகாவிஷ்ணு அண்டங்களையெல்லாம் தன் வயிற்றில் வைத்து அடக்கிக்கொண்டு பிர ளயப் பெருங்கடலில் ஆதிசேஷாம்சமானதோராலிலையின்மீது யோகநித்திரை செய்தருள்கின்றன னென்பது நூற்கொள்கை. அங்காந்த, அங்கா—பகுதி. முகுந்தன் = (தன் அடியார்க்கு), மு – முத்தியின்பத்தையும், கு –நில வுலகவின்பத்தையும், தன் – கொடுப்பவன், செய்ய என்பது – சிலம்புக்கும் பாதத்துக்கும் அடைமொழியாகத் தக்கது. சிலம்புவது, சிலம்புஎனக் காரணக்குறி. நூபுரம், பாத தண்டை.

     

    தனமாதரஞ்சொற்குதலைப்புதல்வர்தரணியில்லந்
    தனமாதரஞ்செயும்வாழ்வஞ்சியேதஞ்சநீயெனப்போந்
    தனமாதரங்கிக்கவெற்பெடுத்தாய்தண்ணனந்தசிங்கா
    தனமாதரங்கமுள்ளாயரங்காமுத்திதந்தருளே. .3.

    (இ –ள்) ஆ – பசுக்கள்; தரங்கிக்க – (இந்திரன் பெய்வித்த மழையினால்) நிலைகலங்க ; வெற்பு எடுத்தாய் – (அவற்றைப் பாதுகாத்தற்பொருட்டுக்) கோவர்த்தநகிரியைக் குடையாக எடுத்துப் பிடித்தவனே ! தண் அனந்த சிங்காதனம் – ஆதிசேஷனை மெத்தென்ற சிங்காதனமாகவுடையவனே ! மாதரங்கம் உள்ளாய் – பெரிய கடலில் பள்ளிகொண்டுள்ளவனே ! அரங்கா – ஸ்ரீரங்கநாதரே ! தனம் மாதர் – கொங்கை எழிலை யுடைய மகளிரும் , அம் சொல் குதலை புதல்வர் – அழகிய மழலைச் சொற்களையுடைய பிள்ளைகளும், தரணி – விளைநிலமும், இல்லம் – வீடும், தனம் – செல்வமும் ஆகிய இவற்றில், ஆதரம் செயும் – ஆசை கொள்கிற, வாழ்வு – (நிலையற்ற இப்பிரபஞ்ச) வாழ்க்கைக்கு, அஞ்சி- பயந்து, நீயே தஞ்சம் எனப் போந்தனம் – நீயே ரக்ஷகமென்றுகொண்டு (வந்து) உன்னைச் சரனடைந்தோம்; முத்தி தந்தருள் – (அங்ஙனம் அடைந்த எமக்கு) மோக்ஷத்தைக் கொடுத்தருள்வாய். ; (எ –று)

    பற்றற்று உன்பக்கல் சரணம் புக்கோம்; நீ எமக்கு நற்கதியருளக்கடவை யென்பதாம். உன்னை நம்பி யடுத்துள்ள உயிர்களைச் சிரமம்பாராது துயர்நீக்கிப் பாதுகாத்தருளுந் தன்மையுடையாய் என்னுங் கருத்துத் தோன்ற “ஆதரங்கிக்க வெற்பெடுத்தாய்” என விளித்தார்; கருத்துடையடைகொளியணி.

    ஆதிசேஷன் திருமாலுக்குப் பலவகைக் கைங்கர்யங்கள் புரியும்வகையை “சென்றாற் குடையாம் இருந்தாற் சிங்காதனமாம், நின்றால்மரவடியாம் நீள்கடலுள்—என்றும் புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும் அணையாம் திருமாற்கு அரவு” என்றதினால் அறிக. திருப்பாற்கடலிலும், பிரளயப்பெருங்கடலிலும் திருமால் பள்ளிகொள்கின்றன னென்பது நூற்கொள்கை. குதலை – நிரம்பாமென்சொல்; “குழலினிது யாழினிது என்பார் தம் மக்கள் மழலைச் சொற்கேளாதவர்.” “மக்கள் மெய்தீண்ட லுடற்கின்ப மற்றவர், சொற்கேட்ட லின்பஞ் செவிக்கு” என்றபடி தம் புதல்வருடைய மழலைச்சொல் தந்தை தாயருக்கு மிக்க இனிமை விளைவித்தலால், ‘அஞ்சொல் குதலைப்புதல்வர்’ என்றார். இல்லம், அம் – சாரியை. இரண்டாமடியில் ஏகாரம் பிரித்துக் கூட்டப்பட்டது. தரங்கிக்க – அலைய ; தரங்கம் என்ற பெயரின்மேற் பிறந்த செயலெச்சம். தரங்கம் – அலை ; வடசொல்; கடலுக்குச் சினையாகுபெயர்; அநந்தன் என்ற வடமொழிப்பெயர், ந+அந்த என்று பிரிந்து , (பிரளயத்திலும்) அழிவில்லாதவன் என்று பொருள்படும். முக்தி என்ற வடசொல்லுக்கு  பற்றுக்களை விட்டு அடையும் இடமெனக் காரணப் பொருள் (எ- று).

    தந்தமலைக்குமுன்னின்றபிரானெதிர்தாக்கிவெம்போர்
    தந்தமலைக்குமைத்தானரங்கேசன்றண்பூவினிடைத்
    தந்தமலைக்குத்தலைவன்பொற்பாதஞ்சரணென்றுய்யார்
    தந்தமலைக்கும்வினையானைவார்பலர்தாரணிக்கே. .4.

    (இ –ள்) தாரணிக்கு – பூமியில், - பலர் –அநேகர்; தந்தம் மலைக்கு முன் நின்ற பிரான் – தந்தங்களையுடைய தொரு மலைபோன்ற யானைக்கு (கஜேந்திராழ்வானுக்கு), எதிரில் எழுந்தருளிக் காட்சி தந்த பெருமானும், எதிர் தாக்கி வெம்போர் தந்த ம(ல்)லை குமைத்தான் – எதிர்த்து மோதிக் கொடியபோரைச் செய்த மல்லர் களைச் சிதைத்து அழித்தவனும், தண் பூவின் தந்து இடை அமலைக்கு தலைவன் – குளிர்ச்சியான தாமரை மலரில் வீற்றிருக்கின்றவளும் நூல் போன்ற (மிக மெல்லிய) இடையையுடையவளும், குற்றமற்றவளுமான திருமகளுக்குக் கொழுநனும் ஆகிய, அரங்கேசன் – ஸ்ரீரங்கநாதனுடைய , பொன்பாதம் – அழகிய திருவடி களை, சரண் என்று – சரணமாக அடைந்து, உய்யார் – உய்வு பெறாராய், அலைக்கும் தம் தம் வினையால் நைவார் – வருத்துகின்ற தங்கள் தங்கள் பூர்வகர்மங்களினால் வருந்துவார்கள் ; (எ –று)

    வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அழுவார்போலே, சரண்புக்கமாத்திரத்தில் அச்சரணாகத ருடைய கருமங்களையெல்லாம் ஒழித்து முத்தி தருபவையான எம்பெருமானது திருவடிகள் இருக்க அவற்றை யடைந்து பிறவிப்பெருங்கடல் கடந்து வாழாது உலகத்திற் பேதையர்பலர் கருமவசப்பட்டு வருந்துவது என்னேயென்று உலகைநோக்கி இரங்கியபடியாம்.

    ‘தந்தமலை’ எனவே, யானையென்றாயிற்று; மலை – உவமையாகு பெயர்; பருமைவலிமைகளால் உவமம் முன் – இடமுன். இரண்டாமடியில், மலை என்பது தொகுத்தல், மல் – ஆயுதமின்றி உடல்வலிமைகொண்டு செய்யும் போர். இங்கு அப்போருடையார்க்கு ஆகுபெயர்; இடைத்தந்து –முன்பின்னாகத்தொக்க உவமைத் தொகை; தந்து – வடசொல். அமலை – அமலா என்ற வடசொல் ஆவீறு ஐயாயிற்று.இப்பெயர் தூய்மை யுடைமையை உணர்த்தும். சரண் – சரணமென்ற வடசொல்லின் விகாரம். தாரணிக்கு – உருபு மயக்கம். தரணி என்ற வடசொல் விகாரப்பட்டது.

     

    January 30

    திருவடிமாலை

     

            வேங்கடநாத னடியா ரடிகளில்
            வேங்கடேசன் மயலா லிறைஞ்சிய
            சேதுவான கழற் காதல் மாலையை
            ஓதுமன்ப ரெழிற்பத மேறுவரே.              (25)
                                           
       (இச்செய்யுள் நுலாசிரியர் தாமே தம்மைப் பிறர் போலும் பாயிரங் கூறும் பணிப்பு. நாந்தி கூறுவதால் தற்புகழ்ச்சி யாகாது. இதனை ``ஓதுமன்பர் எழிற்பதமேறுவரே” என்று நூற்பயன் கூறியிருப்பதால் இது பல ச்ருதி கூறிய வாறுமாம்.

    வேங்கடநாதன்- சீரார் தூப்புல் திருவேங்கடமுடையான் ஸ்ரீமந்நிகமாந்த மஹாதேசிகன்.

      அடியாரடி-
        வலந்தாங்கு சக்கரத் தண்ணல் மணிவண்ணற் காளென்று உள்
        கலந்தார் அடியார் தம் அடியார் எம்மடிகளே.
                                        -(திருவாய்மொழி 3-7-9)
      (எவர்கள் எம்பெருமானுக்கு நாம் தாஸர்கள் என்று எண்ணி அவனை ஆச்ரயிக்கிறார்களோ அவர்களுடைய தாஸர்கள் நமக்கு ஸ்வாமிகள்)

        ”எந்தைபிரான் தனக்
         கடியா ரடியார் தம்மடி யாரடியார் தமக்
         கடியா ரடியார் தம்மடி யாரடி யோங்களே.”
                                        -(திருவாய்மொழி 3-7-10)
      (எம்பெருமானுக்கு எவர் தாஸர்களுக்குத் தாஸர்களோ எவரவர் அவர் தாஸர்களின் தாஸர்களோ எவரவர் அவர் தாஸர்களுக்கும் தாஸர்களோ அவர்களுக்கு நாம் தாஸர்கள்) என்றபடி ஸ்ரீ தேசிகனின் தாஸர்களான பாகவதர்களுக்குத் தாஸனாயிருப்பதே உயர்ந்த புருஷார்த்தமாகும்.

        மயல்-பக்தி. இறைஞ்சுதல்- சரணமடைதல்

        சேதுவான கழல்- ஸம்ஸார ப்ரவாஹத்தைத் தடுத்து அக்கரை சேர்க்கும் திருவடி.

        திருமகளோ டொருகாலும் பிரியாநாதன்
        றிண்கழலே  சேதுவெனச் சேர்கின்றேனே.
                                -(தேசிகமாலை. அமிருதாஸ்வாதினி)

      என்றபடி நாம் ஸம்ஸாரக் கடலைத் தாண்டுவதற்கு உபாயம் ஸ்ரீ தேசிகனின் திருவடிகளைப் பக்தியுடன் வணங்குவதுதான்.

        மாலை- ``மகிழ்ந்துபாடும் செய்யதமிழ்மாலை
                                -(தேசிகமாலை. அதிகாரஸங்க்ரஹம்)
      இச்செய்ய தமிழ்ச் சொன்மாலை காதல் மாலையானது பற்றி ”பக்திநயநா:” என்பது போல் கர்ம சக்ஷுஸ்ஸால் பார்க்க முடியாத பகவானைக் காட்டும் மாலை.

        காதல்-பக்தி  ஆசை. இக்காதல் ”ஆசார்யன் உதவியால் மாயனை வானுலகிற்கண்டு களிக்கவேண்டு மென்ற காதல்.”

        ஒதுமன்பர்- அநுஸந்திக்கும் பக்தர்-ஸ்ரீ வைஷ்ணவ தாஸ்யாம்ருத ரஸிகர்- தேசிகபக்ததாஸ்யர்.

        ``திடமுனீதைத் தினந்தோறு மாதரித்தோதுமன்பர்
                                        -(பிள்ளையந்தாதி)

      பரஸ்பர ஹிதைஷிகள்- ஒருவருக்கொருவர் ஹிதத்தையே விரும்பி ஸ்நேகித்திருக்கும் அடியார்கள்.

       எழிற்பதமேறுவர்- பகவானிடத்தில் மீளாதபேரடிமைக்கு அன்பு பெற்று இங்கிருக்கும் போகங்களெய்திப் பெறுவதெல்லாம் பெற்று வாழ்ந்து மறுபிறவியில்லாது பரப்ரும்மாநுபவம் அடைவர்.

        இக்கோவை முதற்பாட்டில் ”அன்பே” என்று ஆரம்பித்துக் கடைசிப் பாட்டில் ”அன்பர்” என்று முடிவதால், சாந்தி ரஸமுள்ள இப்பாசுரங்களைப் படிப்பவர், அன்பர்க்கே யவதரிக்கும் ஆயனே யெனவன்பர்க்கே யவதரித்தவரும், அன்பை யணிகலமாகக் கொண்ட வருமான ஸ்ரீ தேசிகனின் கிருபையால், ஸதாசார்ய அநுக்ரஹமும் ஸத்ஸம்ப்ரதாயஸித்தியும் பெற்று ஸ்ரீய: பதியின் அன்புக்குப் பாத்திரமாவர் என்பது திண்ணம். இப்பரமாசாரியனை இக்கோவை அன்பினால் சிறுபேரழைத்தாலும் பரமோதாரனான ஸ்ரீ தேசிகனின் ப்ரீதி, அவனை ஆச்ரயித்தவர்களிடத்திலும் அவர்களைச் சேர்ந்தவர்களிடத்திலும், பெருகுவதால் கோவையை யோதும் அடியார்கள் பரமலாபத்தை யடைவார்கள். அன்புடையீர்! நாமெல்லோரும், திண்மை குறையாமைக்கும், உண்மை மறவாமைக்கும், உளமதியில் உகக்கைக்கும், தண்மை கழியாது தரிக்கைக்கும், தணிகைக்கும் ஸ்ரீதேசிகன் ஸ்ரீ ஸுக்திகளைக் கொஞ்சமாவது படித்து படித்ததை ஹ்ருதயத்தில் தரித்துக் கொள்ளுவோமாக.)
    ___________________________________________________________________________

        கழற்கோவை என்கிற திருவடிமாலை இத்துடன் நிறைவு பெறுகிறது.

                                        சுபம்.

                                      

    January 29

    திருவடிமாலை

     

                                         tm5

              அமலனுமக் களித்த பெயரொடும்
            கமலையுகந்தளித்த விருதொடும்
            நல்லாருலகம் நற்பதமெய்திடப்
            பல்லாண்டிரு மென்றிசை பாடுவனே.
                (24)

        (அமலன்-கமலையுடன் அரசாளும் கரிகிரி மேற்காவலன். ச்ரிய:பதி- கமலாஸஹாயன்-`துய்யனும் நீயே செய்யாளுறைதலின்' -(தேசிகமாலை மும்மணிக்கோவை)- பகவான் பரிசுத்தனாவது பெரிய பிராட்டி அவன் திருமார்பில் நித்யவாஸம் செய்வதால்- ஸகல தோஷங்களுக்கும் எதிர்த்தட்டானவன். -பிறருடைய ஸம்ஸாரமாகிற தோஷத்தைப் போக்கி மோக்ஷத்தையளிப்பவன். `அமலன்' என்றது `மலப்ரதிபடன்'- என்றபடி- இத்தால் மோக்ஷப்ரதத்வம் சொல்லிற்றாயிற்று. இது ப்ரதாநமான ரக்ஷகத்துவமாகையாலே பிரியப் பேசப்படுகிறது.
                                        -(முநிவாஹநபோகம்)

        உமக்களித்த பெயர்: வேதாந்தாசார்யர் என்று உமக்கு ஸ்வரூப நிரூபமாக ஸ்ரீ ரங்கநாதன் அளித்த சாச்வதமான திருநாமம். இத்திருநாமமே உன்னடியார்களுக்கு நற்பதம் கொடுக்கும். வேறு ஒருவருக்கும் கிடைக்காத பெயரைப் பாகவதநுக்ரஹ மாகப் பெற்றார்.- வேதாந்தங்களில் நிலவராயிருப்பவர்.

        ஸ்ரீரங்கபர்த்தாவருளிய இந்த பிருதுசாஸனத்தைக் கைங்கர்ய சாஸநமாக் கொண்டு சாரீரக சாஸ்திரத்தை ஸேவிக்கும் எல்லாருக்கும் எக்காலத்திலும் ஸர்வவித சங்கைகளையும் தெளிவித்து விசதமாகப் போதித்து ஞாநப்பால் ராசியைப் பருகிப் பருகி இன்புற்று வேதாந்தத்தில் ப்ரதிஷ்டிதராகும்படி செய்ய `அதிகரணஸாராவளி' என்ற மஹாக்ரந்தத்தை நம் ஸ்வாமி இயற்றியிருக்கிறார். பிற்காலத்தில் சிஷ்ய ப்ரசிஷ்ய பரம்பரைகளுக்கு மனத்தில் உதிக்கக்கூடிய ஸகல ஸம்சயங்களும் அறும்படி எல்லா சங்கைகளையும் எடுத்துப் பரிஹரித்து எல்லோரும் எளிதில் மனப்பாடம் செய்து ஹ்ருதயத்தில் தரிக்கும்படி மதுரமான ச்லோகங்களால் இந்த ஹ்ருத்யமான பத்யாவளியைச் செய்தார். ஸ்வாமி நமக்கெல்லாம் ஸாக்ஷாத்தாக ஆசிரியராயிருந்து சாரீரகமெனும் வேதாந்த சாஸ்த்திரத்தை நேருக்கு நேராக எதிரேயிருந்து போதிக்கா விடினும் ஸ்வாமியின் ``மதுமத்த மான” ஜிஹ்வையிலிருந்து அவதரித்த இப்பாடல்கள் நமக்கு ஸ்வாமிஸ்தாநத்தில் ஆசார்யகம் செய்து நம் ஸந்தேகங்களையெல்லாம் முற்றிலும் போக்கி நமக்கு ஞாநப்பாலை யளித்து வானேறப் போமளவும் வாழ்வை அளிக்கின்றன.

       இப்பெயர்- என்ற பதம் இவருக்குக் கிடைத்த `கவிதார்க்கிகஸிம்ஹம்' என்ற விருதையும் காட்டும். ஸ்ரீரங்க நாதனிடம் வேதாந்தாசாரியர் என்ற பட்டத்தைப் பெற்ற இவர் ஸ்ரீதெய்வநாயகனிடம் கவிதார்க்கிகஸிம்ஹம் என்ற பிருதையும் பெற்றார்.  திருவஹீந்திரபுரத்தில் எதிர்த்து வந்த பதினெட்டு மதஸ்தர்களையும் நிரஸித்து ஸர்வசாஸ்த்ர நைபுண்யாதிசயத்தைக் காட்டி `சததூஷணி' என்ற க்ரந்தத்தை யருளிச் செய்து ஸ்ரீராமாநுஜதர்சந ஸ்தாபநாசார்யர்களில் முக்கியராய் எழுந்தருளி யிருந்தவர்.

        கமலையுகந்து அளித்தவிருதொடும்- `ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரர் என்ற திருநாமம் பெற்றவர்- ஸ்வாமியினுடைய ஸர்வ தோமுகமான ஞாநாதிசயத்தைக் கடாக்ஷித்துப் பெரிய பிராட்டியாரான ஸ்ரீரங்கநாயகி ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரர் என்கிற பிருதைப் ப்ரஸாதித்தருளினாள். தாயும் நீயே சாயை தந்துகத்தலின்- (தேசிகமாலை மும்மணிக் கோவை)- என்ற லோகமாதாவான பிராட்டி தன் மகனுக்கு விருதையளித்துப் பெருமகிழ்ச்சியடைந்தாள். தந்தை மகனுக்குச் செய்யவேண்டிய கடமையென பகவான் ஸ்ரீ தேசிகன் காட்டிய ஞானோத் கர்ஷாதிகளுக்குத் தன் அநிதரஸாதாரணமான `வேதாந்தாசார்யர்' என்ற பெயரைக் கொடுக்கும்படியாயிற்று. தாயான பிராட்டிக்கோ தன் மகனுக்குப் பட்டமளிப்பதே உகப்பு.

        நல்லாருலகம்- ``நின் கோதிலாத்தாள் மலரைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் தீதிலா நல்லோர்” ஒரு தீங்குமில்லாதவர்களான ``ஸந்த மேநம்” என்று வேதத்தில் சொல்லப்பட்ட பெரியோர்கள் திருவோலக்கம் (திரள்) என்றபடி.

        நற்பதம் எய்திட- உயர்ந்த ஸ்தாநமாகிய பரமபதத்தில் நித்ய ஸுரிகளின் அநுபவத்தையடைய நற்பதம் பெற ஒவ்வொரு சேதநனும் ஆசார்யனையடைந்தேயாக வேண்டும். ஆசாரியன் பெருமைக்காகவே பகவானுடைய கருணை தானே பெருகி , ஸம்ஸார பந்தத்தை அறுத்துப் பரப்ரும்மாநுபவத்தை யளிக்கும்.

        பல்லாண்டிருமென்றிசை பாடுவனே-

        ``தொண்டருகக்கும் துணையடிவாழி நின்தூமுறுவல்
        கொண்டமுகம் வாழி வாழி வியாக்கியா முத்திரைக்கை
        வண் திருநாமமும் வாழி மணி வடமுப்புரி நூல்
        கொண்டசீர் தூப்புல் குலமணியே வாழி நின்வடியே
                                            -(பிள்ளையந்தாதி)
        `` பல்லாண்டே பல்லாண்டும் பாடுவோமே
                                    -(தேசிகமாலை. பரமபத சோபாநம்)
       என்று இவரை இக்கால தத்வமுள்ளதனையும், மங்களோத்கர்ஷத்தையும், மங்களா சாஸனோத் கர்ஷத்தையும் பெற இன்மொழி பாடுவோம். இவருடைய நாமஸங்கீர்த்த நம்  அம்ருதம் போன்றதாலும் இப்பொழுது நாம் ஸேவிக்கும் இவர்தானே ஏறியருளிய விக்ரஹம். இவர் சீர்மையைக் காட்டுவதாலும்- பல்லாண்டு பாடுவோம்- இன்னுமொரு நூற்றாண்டிருமென்று- அதாவது கால தத்வமுள்ளதனையும் அனேக வர்ஷங்களிலும் பாங்காக எழுந்தருளியிருக்க வேண்டு மென்றபடி- ஸ்ரீ தேசிகனின் திருவவதார ப்ரயோஜநம் திவ்ய தம்பதிகளுடைய, விபுத்வ, உபாயத்வாதி ஸமஸ்த கல்யாண குணப்ரகாசந உபய வேதாந்தங்களுடைய ஸ்தாபநம் என்றும், இது நித்தியமாகச் செல்லுகைக்காக அத்தலைக்கு மங்களாசாஸநமாய்ப் பல்லாண்டு பாடவேண்டு மென்றும் சொல்லியபடி. இந்த விலக்ஷணமான ஆசார்ய ரத்நத்தை நமக்குக் கொடுத்த ஸர்வலோக சரண்யனுக்கு நாம் எவ்விதம் க்ருதஞ்ஞதாநுஸந்தாநம் செய்ய முடியும். ``அஹோபாக்யம் அஹோபாக்யம்” என்று பகவானுக்கும் ஸ்ரீ தேசிகனுக்கும் பல்லாண்டு பாடுவது தான்.
        நானிலமும் தான்வாழ நான்மறைகள் தாம்வாழ
        மாநகரின் மாறன் மறைவாழ- ஞானியர்கள்
        சென்னிஅணி சேர்தூப்புல் வேதாந்த தேசிகனே
        இன்னுமொரு நூற் றாண்டிரும்.

    January 27

    திருவடிமாலை

     

                                              tm6

            குருபுங்கவனே கருணாநிதிநின்
            அருளா லநுபூதி பிறந்ததுவே
            திரிகின்ற மனந்திரியா துனையே
            அறிவாலடியார் தொழுதேசிகனே
    .                    (23)

      (குருபுங்கவனே- குருச் சிரேஷ்டர்; புனிதன்; ஆசார்ய பங்க்தியில் முடிசூடிய மன்னன். மந்திரரத்நம்- மூலமந்திரம். புராணரத்நம்-ஸ்ரீ விஷ்ணு புராணம்-ஸ்தோத்ர ரத்நம்-ஸ்ரீ ஆளவந்தார் ஸ்தோத்ரரத்நம்.  ஆசார்ய ரத்நம்- ஸ்ரீ தேசிகன். ஸகல ஜனங்களுக்கும் உஜ்ஜீவனமான தத்வஹித புருஷார்த்தங்களின் விஷயமாக மஹோபகாரம் செய்தவர்.- விமலாசய வேங்கடேசன்-(பரமார்த்தஸ்துதி) என்று தாமே அருளியபடி ``மாசற்ற மனமுடைய குருமாமணி.” ``கோதற்ற நான்மறை மௌலியின் ஆசிரியன்.”
                                        -(கீதார்த்தஸங்க்ரஹம்)
       கருணாநிதி- எல்லையில்லாத கருணையுடையவர்- ``நிரவதி கருணாப்தௌ வேதசூடாகுரு”. தயையை வடிவாக வந்த பரமதயாளு. தயாபரவசர்- தயாபரிபூர்ணர்.

       அருளால்- பகவானைப்போல் ``என்னை இசைவித்தென்னை யுன்தாளிணைக் கீழிருந்தும் அம்மானே”. உம்மைத் துதிக்கப் பெறுவது உமது அநுக்ரஹத்தினால் உண்டாயிற்று.

        அநுபூதி பிறந்ததுவே- உன்னால் கிடைத்த அநுபூதி நீ அருளிய ஞாநமும் அதன் உணர்ச்சியும்- நான் அநுபவித்த உணர்ச்சியும்-சொல்ல இயலாத உணர்ச்சி. அநுபவஜநிதஞானம்-தானே கண்டறிந்ததும் பிறர்க்குச் சொல்ல இயலாததுமான அறிவு-ஸ்மிருதி வ்யதிரிக்த ஞாநம்-ஆனால் உன்னால் கிடைத்த அநுபூதி பரமார்த்தமானதே- சிந்தின ப்ரமாணங்களைக் கொண்டு அறிந்த அறிவு- உன்னைக்கொண் டென்னுள் வைத்தேன்- உன்னையும் என்னிலிட்டேன்- இவ்விதம் அநுபவித்த உணர்த்தி.

            உணர் விலும்ப ரொருவனை
                அவனதருளால் உறற்பொருட்டு என்
            உணர்விலுள்ளே இருத்தினேன்
                அதுவும் அவனது இன்னருளே.
                                        -(திருவாய்மொழி.8.8.3)

         திரிகின்ற மனம்- நின்ற வானில்லா நெஞ்சு- ஒரு ஸமயத்தில் நிற்கிறபடி நிற்காமல் ராஜஸ தாமஸ அஹங்காரங்களுக்கு விளை நிலமானமனது- விஷயபோகங்களில் அலையுமு மனது -வைதிகர்களின் அநுஷ்டாநத்தில் ஏகதேசத்தையும் கைக்கொள்ளாது தோன்றியவாறு திரிகின்ற மனம்.

        திரியாதுனையே தொழும்.......- இக்கொடிய உலகில் இருக்கவேண்டிய காலத்தளவும் என்ன பிழை வருகின்றதோ என்று, உன்னைத் தன்னெஞ்சில் உயிர்க்காவலாக நிறைத்துக் கொண்டு உனக்கிடமாயிருக்க வேண்டுமென்று தொழும் அடியார்.
        ``என்னைத் தீமனம் கெடுத்தாய் உனக்கு என்செய்கேன்” என்றபடி நீர் செய்த மஹோபகாரத்தை நினைந்து நைந்துக்ருதக்ஞதாநு ஸந்தாநம் செய்துகொண்டும் உமது அருளிச் செயல்களின் அர்த்த விசேஷங்களின் சீர்மையை ஸதா த்யாநித்துக் கொண்டும் உம்முடைய குணாநுபவங்களைப் பண்ணிக்கொண்டுமிருக்கும் அடியார்கள். நீர் அவர்களுக்குக் கொடுத்த அறிவாலேயே தொழுபவர்.

        நின்னபாதபங்கயம்,  நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே.- (திருச்சந்தவிருத்தம்) என்று திருமழிசைப்பிரான் அருளியவாறு உன்னையே அடிபணியும் தொண்டர்.

        அறிவாலடியார் தொழு- உன் கிருபையைத் தவிர வேறு ஸாதனமில்லை. அதையடைய உன்னைத் தொழுவதற்கு நல்ல அறிவு வேண்டும். அவ்வறிவு உன் கழலை நாடவேண்டும். மையலோடு அதற்கு உன்  அருள் வேண்டும். அதையடைய உன்னடியார் கிருபை வேண்டும். உன்னோடு உன்னடியாரையும் வணங்குகின்றேன். உன் துதியைக் கோஷிக்க அவர்கள்தான் ஏற்றவர்கள்.

        தேசிகனே-பரமாசர்யனே. ஆசார்யத்வம் இவரிடத்தில்தான் பூர்ணத்வமடைந்தது. ``தயாபாத்ரம யதீந்த்ரஸ்ய தேசிகம் பூர்ணம்”. என்றபடி. ஆசார்யன் நாம் அடைய வேண்டிய மேலான வித்யை, தனம்போல் ப்ரயோஜநமாகவும் உபாயமாகவும் ஆச்ரயிக்கத் தகுந்தவர்- தம்பரமென்றிரங்கித் தளரா மனந்தந்து அடியார் தொழும் பெருந்தகைத் தேசிகனே என்றவாறு.

           

    திருவடிமாலை

     

                                     tm11

              நின்பேரறியார் மேயவ ராவரோ
            உன்னையறிந்து மறந்திடுவாரோ
            நின் தொண்டர்க்கேயன்பு செய்திட
            என்னை யாக்கியே யருள்புரிவாயே
    .            (22)
     
    (நின்பேரறியார்- பேர்-புகழ்: உன் 'பேர்சொலார் நேர் செலாதாவர்'.- வேதமுடி ஆரியரின் வீறுடைய நற்கலைகள் ஓதியுணராதவர்.

        மேயவராவரோ- மநுவிடமிருந்து பிறந்த மானிட ச்ரேஷ்டர். மனிதத்தன்மை பூரண மாகவுடையவர். தகுதியானவர் அறிஞர்- ”மநுஸுதா” என்ற மநுகுலத்திலுதித்தவர். மானமிலா வடிமை பூண்ட மனத்தினர். பகவானிடம் பேரடிமைக்கன்பு பெற்று விதியினாலே மேதினியிலிருக்கும் பெரியோர்- நற்பிறப்பும் அறிவும் அடைந்தும் நின்பேரறியார் பயனற்றவர்- மானிடராகார்.

        நின்பேர்-நின்திருநாமம்-நின்புகழ்
        எண் பெருக்கந்நலத்து, ஒண்பொருளீறில,
        வண்புகழ் நாரணன் திண்கழல்சேரே.
                                    -(திருவாய்மொழி: 1-2-10)
        ”பஜனத்துக்கு ஆலம்பநமான மந்த்ரம் எம்பெருமானான ஸ்ரீமந் நாராயணனே- அவன் கணக்கில்லாத ஜீவன்களையும் கல்யாண குணங்களையும் சேஷமாகவுடைய வன். தன் திருவடிகளை யடைந்தவர்களை அவன் ஒருபொழுதும் விடான். அந்தத் திருவடிகளை யடையுங்கள்” என்றவாறு உன் திருநாமம் புகழ இவைகளை யநுஸந் தாநம் செய்வதே பரம புருஷார்த்தமாகும்.

        உன்னையறிந்து- உன்னையோ உன் அர்ச்சா விக்ரஹத்தையோ ஸேவித்தவர்-``கண்டோம் கண்டோ” மென்று